லண்டனில் புலிக்கொடியை ஏற்ற மறுத்தார் வடக்கு முதல்வர்
லண்டனில் புலிக்கொடி ஏற்றுவதற்கு, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மறுத்து விட்டார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவின் கிங்ஸ்டன் நகருக்கும் யாழ்ப்பாண நகருக்கும் இடையில் இரட்டை நகர உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்காக லண்டன் சென்றுள்ள வட மாகாண முதலமைச்சர், அங்குள்ள புலம் பெயர் அமைப்புகளால் ஒழுங்குபடுத்தப்பட்ட கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.
ஹரோவில் நேற்று முன்தினம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பங்கேற்ற பெரியளவிலான கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வின் தொடக்கத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டு, மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தவும் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.
எனினும், நிகழ்வில் தாம் புலிக்கொடியை ஏற்ற மாட்டேன் என்று ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர், அத்தகைய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அந்தக் கூட்டத்தில் தாம் உரையாற்ற மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து ஏற்பாட்டாளர்கள் புலிக்கொடியை ஏற்றும் முடிவைக் கைவிட்டனர். இதனையடுத்து, நிகழ்வில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுமார் 30 நிமிடங்கள் உரையாற்றினார்.
அவர் தனது உரையில் அரசியல் வேறுபாடுகளை மறந்து தமிழர் பிரச்சினையைத் தீர்க்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.