மாணவர்கள் படுகொலையை கண்டித்து வடக்கில் நாளை மறுநாள் முழு அடைப்பு போராட்டம்
கொக்குவில் பகுதியில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், சிறிலங்கா காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, நாளை மறுநாள் வடக்கு மாகாணத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் படுகொலை தொடர்பாக ஆராய்வதற்காகவும், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நிகழாமல் தடுப்பதற்காகவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து யாழ். நகரில் இன்று அனைத்து தமிழ்க்கட்சிகளின் கூட்டம் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்திலேயே மாணவர்கள் படுகொலையைக் கண்டித்து, இந்தப் படுகொலைகளுக்கு விரைவாக நீதி வழங்க வலியுறுத்தியும், வடமாகாணததில் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஈபிஆர்எல்எவ், புளொட், ரெலோ, மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மற்றும் தமிழர் சமூக ஜனநாயக கட்சி ஆகியன பங்கேற்றன.
இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு யாழ்ப்பாண மாவட்ட வணிகர் கழகமும் ஆதரவு தெரிவித்துள்ளது.