மேலும்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை – 5 சிறிலங்கா காவல்துறையினர் கைது

jaffna-shooting-1கொக்குவில்- குளப்பிட்டிச் சந்தியில் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிலேயே மரணமானதாக தெரியவந்துள்ளது.

உந்துருளியொன்றில் சுன்னாகத்தில் இருந்து யாழ். பல்கலைக்கழக விடுதி நோக்கிச் சென்று கொண்டிருந்த மாணவர்கள் இருவர் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகி மரணமானதாக அவர்களின் சடலங்களை சிறிலங்கா காவல்துறையினர் யாழ். மருத்துவமனையில் ஒப்படைத்திருந்தனர்.

யாழ். பல்கலைக்கழக அரசறிவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவனான கிளிநொச்சியைச் சேர்ந்த நடராஜா கஜன் (வயது-23), ஊடகத்துறை மூன்றாம் ஆண்டு மாணவனான, கந்தரோடையைச் சேர்ந்த பவுண்ராஜ் சுலக்சன் (வயது24) ஆகிய இருவரதும் சடலங்களே மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டன.

இந்த விபத்து நடந்த நேரத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும், காவல்துறையினரின் நடமாட்டம் இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.

jaffna-shooting-1jaffna-shooting-2jaffna-shooting-4

இந்தச் செய்தி பரவியதும், யாழ். பல்கலைக்கழகத்தில் பதற்றம் ஏற்பட்டது. பெருமளவிலான மாணவர்கள் யாழ். போதனா மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து மாணவர்கள் இருவரினதும் சடலங்கள் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில், மாணவர்களின் மரணத்துக்கு துப்பாக்கிச் சூடே காரணம் என்று தெரியவந்திருப்பதாக கூறப்படுகிறது.

அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகாவிடினும், உயிரிழந்த மாணவன் ஒருவரின் நெஞ்சில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் இருப்பதாக சட்டமருத்துவ அதிகாரி, உடற்கூற்றுப் பரிசோதனையின் போது, அந்த மாணவனின் தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் வெளியானதையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா யாழ். போதனா மருத்துவமனைக்கு சென்று உடற்கூற்றுப் பரிசோதனை தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

மாணவர்களைச் சந்தித்த அவர், இதுபற்றிய உயர்மட்ட விசாரணைகளை நடத்த கூட்டமைப்பு வலியுறுத்தும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், திருகோணமலைக்கு இன்று பயணம் மேற்கொண்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்தச் சம்பவம் குறித்து நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரினார்.

இதையடுத்து உடனடியாகவே, சிறிலங்கா அதிபரின் உத்தரவின் பேரில், சிறப்பு காவல்துறைக் குழுவொன்று யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஒரு மாணவன் துப்பாக்கிச் சூட்டினாலேயே கொலை செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை இன்று மாலை சந்தித்த யாழ்.பிரதம நீதிவான் சதீஸ்கரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நீதி விசாரணைக்கு  உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் அமைதி காக்கும்படியும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை, இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் ஐந்து சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து, யாழ். நகரப்பகுதி, யாழ். பல்கலைக்கழகப் பகுதிகளில் கலகம் அடக்கும் காவல்துறையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *