சம்பந்தனைச் சந்தித்தார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்
சிறுபான்மையினர் உரிமைகளுக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் டியாயே இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது.
சிறுபான்மையினர் உரிமைகளுக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் டியாயே சிறிலங்காவின் நிலைமைகளைக் கண்காணிப்பதற்காக பத்து நாட்கள் பயணமாக வந்துள்ளார்.
இன்றுடன் தமது பயணத்தை முடித்துக் கொள்ளவுள்ள நிலையிலேயே அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இதன்போது சிறிலங்காவின் சிறுபான்மையின மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக இரா. சம்பந்தன், ஐ.நா அறிக்கையாளரிடம் எடுத்துக் கூறினார்.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.
ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் இந்தப் பயணத்தின் முடிவில் தயாரிக்கும் அறிக்கையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.