நிமால் நினைவு நாளில் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 16ஆவது ஆண்டு நினைவு நாளான இன்று, மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
இன்று காலை 10.30 மணியளவில் யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஒன்று கூடிய ஊடகவியலாளர்கள் மற்றும் பிரமுகர்கள், பொதுமக்கள், இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக அனைத்துலக பங்களிப்புடன் விரைவான விசாரணை நடத்தப்பட வேண்டும், ஊடகவியலாளர்கள் சுதந்திரமான முறையில் பணியாற்றுவதற்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும், தகவல் உரிமைச் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்துக்கு முன்னதாக, யாழ். பிரதான வீதியில் ஊடகவியலாளர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 2000ஆம் ஆண்டு இதே நாளில் யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் ஒளிப்படங்களையும், பதாதைகளையும் தாங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.