இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு பணிப்பாளர் பதவி விலகினார் – மைத்திரிக்குப் பதிலடி
சிறிலங்காவின் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்சி டயஸ் விக்கிரமசிங்க தமது பதவியில் இருந்து விலகுவதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளார். அவர் தமது பதவி விலகல் கடிதத்தை, சிறிலங்கா அதிபருக்கு இன்று அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த 12ஆம் நாள் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, குற்றப்புலனாய்வுப் பிரிவு, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு என்பன, அரசியல் நோக்கங்களுடன் விசாரணைகளை முன்னெடுப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இதனை அடுத்தே, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் முன்னைய ஆட்சியாளர்களை காப்பாற்றும் நோக்கில் சிறிலங்கா அதிபரின் உரை அமைந்திருந்ததாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளரின் பதவி விலகல் சிறிலங்கா அதிபருக்கும், அவரது நல்லாட்சிக் கோட்பாட்டுக்கும் பலத்த அடியாகவும் பின்னடைவாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.