சீன அதிபருடன் இருதரப்பு பேச்சு நடத்தவுள்ளார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் இருதரப்புப் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வந்துள்ளார்.
அதேவேளை, இந்த மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினராக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் அழைக்கப்பட்டுள்ளார்.
இன்றும் நாளையும், இந்தியா, சீனா, பிரேசில், தென்னாபிரிக்கா, ரஷ்யா ஆகிய பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் மற்றும் பலதுறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முனைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் தாய்லாந்து, மியான்மார், பங்காதேஸ், நேபாளம், பூட்டான், சிறிலங்கா ஆகிய நாடுகளின் தலைவர்களும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.
இந்தப் பேச்சுக்களின் பின்னர், பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கிடையில் தனிப்பட்ட இருதரப்பு சந்திப்புகளும் இடம்பெறவுள்ளன.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்துவார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், நேபாளம் மற்றும் பூட்டான் பிரதமர்களுடனும், மியான்மாரின் வெளிவிவகார அமைச்சர் ஆங் சான் சூகியுடனும் சி்றிலங்கா அதிபர் பேச்சு நடத்தவுள்ளார்.