ரணிலைச் சந்திக்க வெளியே வந்தார் சோனியா காந்தி
இந்தியாவின் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை, சிறிலங்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
இந்தியாவுக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, நேற்றுக்காலை புதுடெல்லியில் உள்ள தாஜ் விடுதியில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
இரண்டு மாதங்களுக்கு மேலாக உடல்நலக குறைவினால் பகிரங்க சந்திப்புகளில் பங்கேற்காத, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முதல் முறையாக சிறிலங்கா பிரதமருடனான சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.
கையில் கட்டுப் போடப்பட்டிருந்த நிலையில் அவர் சிறிலங்கா பிரதமரைச் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் மற்றும் பொருளாதார அணுகுமுறைகள் தொடர்பாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரை சிறிலங்காவுக்கு வருமாறும், ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.