மைத்திரியுடன் நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறை ஒழிப்பு – நியூசிலாந்தில் ரணில்
நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய பதவிக்காலத்துடன் ஒழிக்கப்படும் என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஓக்லாந்து நகர சபையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு, அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சிறிலங்கா பிரதமர்,ரணில் விக்கிரமசிங்க,
“ நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு நாம் எதிர்பார்த்திருக்கிறோம்.
எனினும், நிறைவேற்று அதிகார அதிபர் முறைக்குப் பதிலாக எத்தகைய ஆட்சி முறையைக் கொண்டு வருவது என்பது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை.
எவ்வாறாயினும், இதன் அதிகாரங்கள் அனைத்தையும் நாடாளுமன்றத்துக்கு அல்லது தேசிய சட்டசபை, செனட் சபை மற்றும் மாகாணசபைகளுக்கு மாற்றுவது குறித்து கலந்துரையாடப்படுகிறது” என்று தெரிவித்தார்.