சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தகவல் உரிமைச் சட்டம் ஒருமனதாக நிறைவேறியது
தகவல் உரிமைச் சட்டம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று ஒருமனதாக- வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. நேற்றுமுன்தினம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தகவல் உரிமைச் சட்ட மூலம் மீதான விவாதம் ஆரம்பமானது.
இரண்டு நாட்கள் நடந்த விவாதங்களில் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இதையடுத்து, நேற்று இந்த சட்டமூலத்தை திருத்தங்களுடன் வாக்கெடுப்பு நடத்தாமலேயே நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. இதன் படி, இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தமது அரசாங்கம் இந்த சட்டத்தை 2003ஆம் ஆண் கொண்டு வர முயன்றதாகவும், ஆனால், 2004ஆம் ஆண்டு தேர்தலில் தமது கட்சி தோல்வியடைந்ததால், நிறைவேற்ற முடியாமல் போனதாகவும் சிறிலங்கா பிரதமர் தெரிவித்தார்.
மேலும் அரச நிறுவனங்களில் பொதுமக்களுக்கான தகவல்களை அளிக்கும் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.