சிறிலங்காவுக்கு இரு ரோந்துப் படகுகளை வழங்குகிறது ஜப்பான்
கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, சிறிலங்காவுக்கு இரண்டு ரோந்துப் படகுகளை வழங்குவதற்கு ஜப்பான் முன்வந்துள்ளது.
ஜப்பானின் நகோயா நகரில், சிறிலங்கா அதிபருக்கும், ஜப்பானியப் பிரதமர் சின்ஷோ அபேயிற்கும் இடையில் நேற்றுக்காலை நடந்த பேச்சுக்களின் போதே இதற்கான இணக்கப்பாடு காணப்பட்டது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, இரண்டு ரோந்துப் படகுகளை சிறிலங்காவுக்கு வழங்குவதாக, சிறிலங்கா அதிபரிடம் ஜப்பானியப் பிரதமர் சின்ஷோ அபே, தெரிவித்தார்.
அத்துடன் சிறிலங்காவுக்கு குடிநீர் மற்றும் மின்சார விநியோகத் திட்டங்களுக்காக 38 பில்லியன் யென் (சுமார் 50 பில்லியன் ரூபா) கடனுதவி வழங்குவதாகவும் ஜப்பான் அறிவித்துள்ளது.
இந்தப் பேச்சுக்களில் சிறிலங்கா அமைச்சர்கள் மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்கிரம, நவீன் திசநாயக்க, மகிந்த அமரவீர ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பையடுத்து வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், இந்தியப் பெருங்கடல், கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களில் சீனாவின் செயற்பாடுகள் அதிகரித்திருப்பது பற்றி எந்த விடயங்களும் தெரிவிக்கப்படவில்லை.
எனினும், கடல்சார் சட்டங்களுக்கு அமைய ஆழ்கடலில் சுதந்திரத்தைப் பேண வேண்டியது முக்கியமானது என்று இரண்டு நாடுகளும் வலியுறுத்துவதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.