கச்சதீவு தேவாலயம் இடிக்கப்படாது – சிறிலங்கா கடற்படைத் தளபதி
கச்சதீவில் உள்ள பழைமையான தேவாலயம் இடிக்கப்படாது என்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
தி ஹிந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், கச்சதீவில் சிறிலங்கா கடற்படை தளத்தை அமைக்கவுள்ளதாக, வெளியான செய்திகளை நிராகரித்தார்.
”இத்தகைய செய்திகள் அடிப்படையற்றவை. இங்கு புதிய தேவாலயம் கட்டும் பணிகள் மாத்திரம் சிறிலங்கா கடற்படை மேற்கொள்கிறது.
இந்தியாவின் தலையீடு காரணமாக கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படவில்லை. மோசமான காலநிலையால் தான் கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. காலநிலை சீரானதும் விரைவில் இந்தப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும்.
தற்போதுள்ள தேவாலயம் 1901ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அது ஒரு புராதனச் சின்னம். அதனை சிறிலங்கா கடற்படை எதுவும் செய்யாது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.