நைஜீரியாவுக்கு 9 ரோந்துப் படகுகளை விற்பனை செய்தது சிறிலங்கா கடற்படை
சிறிலங்கா கடற்படை உள்நாட்டில் தயாரித்த, ஒன்பது கரையோர ரோந்துப் படகுகளை நைஜீரியாவுக்கு விற்பனை செய்துள்ளது. வெலிசறையில் உள்ள படகு கட்டுமான தளத்தில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில், நைஜீரியத் தூதுவர், அகமட்டிடம், சிறிலங்கா கடற்படை அதிகாரிகளால் இந்தப் படகுகள் கையளிக்கப்பட்டன.
ஆறு அரோ ரகப் படகுகளும், வேவ் ரைடர் ரகத்தைச் சேர்ந்த மூன்று கரையோர ரோந்துப் படகுகளுமே, நைஜீரியாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம், சிறிலங்கா கடற்படை 4.2 மில்லியன் டொலரை வருமானமாகப் பெற்றுள்ளது.
கடற்புலிகளுடனான சண்டை அனுபவங்களைக் கொண்டு, சிறிலங்கா கடற்படை ஆரோ மற்றும் வேவ் ரைடர் படகுகளை சிறிலங்கா கடற்படை வடிவமைத்திருந்தது.
1994ஆம் ஆண்டு முதலாவது அரோ ரக ரோந்துப் படகை சிறிலங்கா கடற்படை சிறப்புப் படகுப் படையணிக்காக வடிவமைத்திருந்தது. இதுவரை 120 அரோ வகைப் படகுகளை சிறிலங்கா கடற்படை தயாரித்துள்ளது.
நான்காவது கட்ட ஈழப்போரில், கடற்புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்த சிறிய வகைத் தாக்குதல் படகுகள், முக்கிய பங்காற்றியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.