வடக்கு மாகாணசபையின் தீர்மானத்தை நிராகரித்தது மேல் மாகாணசபை
வடக்கு-கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைத்து, சமஸ்டி ஆட்சி அலகு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கோரி, வடக்கு மாகாணசபையில் நிறைவேற்ப்பட்ட தீர்மானத்தை, மேல்மாகாணசபை நிராகரித்துள்ளது.
வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட, வடக்கு –கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை நிராகரிக்கும் பிரேரணை நேற்று மேல் மாகாணசபையில் முன்வைக்கப்பட்டது.
ஜாதிக ஹெல உறுமயவின் உறுப்பினர் நிசாந்த சிறிவர்ணசிங்க இந்த பிரேரரணையை முன்வைத்தார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து, இரண்டு சமஸ்டி அலகுகளை உருவாக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், நாடு மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று நிசாந்த சிறி வர்ணசிங்க எச்சரிக்கை விடுத்தார்.
அரசாங்க மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் வடக்கு மாகாணசபையின் தீர்மானத்துக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டனர்.
இதையடுத்து, வடக்கு மாகாணசபையின் தீர்மானத்தை நிராகரிக்கும் பிரேணை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.