கோத்தா மீதான குண்டுத் தாக்குதல் வழக்கு – ஜூன் 27ஆம் நாள் விசாரணை
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை, எதிர்வரும் ஜூன் 27ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு மேல்நீதிமன்ற ஆணையாளர் ஐராங்கனி பெரேரா முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது முன்னிலையான கோத்தாபய ராஜபக்சவின் சட்டவாளர், கோத்தாபய ராஜபக்ச அமெரிக்காவில் இருப்பதால், அவரது சாட்சியத்தை வேறோரு நாளுக்கு ஒத்திவைக்குமாறு கோரினார்.
பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டவாளர் தவராசா அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
தமது கட்சிக்காரர்கள், ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக விளக்கமறியலில் இருப்பதாகவும், விரைவாக நாள் ஒன்றைக் குறிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையிலேயே, இந்த வழக்கு ஜூன் 27ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
2006 டிசெம்பரில் கொழும்பு பித்தல சந்தியில் வைத்து கோத்தாபய ராஜபக்ச மீது உந்துருளியில் வந்த ஒருவரால் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதில் அவர் காயங்களின்றி உயிர் தப்பினார். இந்த வழக்கில் ஐந்து பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்களில் நால்வர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.