சிறிலங்காவில் இருந்து கொகோஸ் தீவு சென்றது அகதிகள் படகு – அவுஸ்ரேலியா அதிர்ச்சி
சிறிலங்காவில் இருந்து சென்ற அகதிகள் படகு ஒன்று அவுஸ்ரேலியாவின் கொகோஸ் தீவை நேற்றுக்காலை அடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோசமான கால நிலைக்கு மத்தியில் நேற்றுக்காலை 10.45 மணியளவில் இந்த அகதிகள் படகு கொகோஸ் தீவுக்குள் நுழைந்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவித்தனர்.
சுமார் 10 அல்லது 11 மீற்றர் நீளமான இந்த மரப்படகு 12 தொடக்கம் 15 நொட்ஸ் வேகத்தில் பயணம் செய்ததாகவும், தற்போது இந்தப் படகு, ஹோம் தீவில் இருந்து 500 மீற்றர் தொலைவில் நங்கூரமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீலம் மற்றும் மஞ்சள் நிறத்திலான இந்தப் படகில் 12 பேர் வரை வந்திருக்கலாம் என்றும் உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கொகோஸ் தீவுக்கு வந்திருக்கும் முதல் அகதிகள் படகு இதுவாகும்.
அகதிகள் படகுகளைத் தடுப்பதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை அவுஸ்ரேலியா மேற்கொண்டிருந்த நிலையில், இந்தப் படகு கொகோஸ் தீவை அடைந்திருப்பது அவுஸ்ரேலியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.