மேலும்

பிரகீத் கடத்தல் – மற்றொரு இராணுவப் புலனாய்வு அதிகாரியும் கைது

prageeth eknaligodaஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவைக் கடத்திச் சென்ற குழுவில் இடம்பெற்றிருந்த மற்றொரு சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரியை, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

2010ஆம் ஆண்டு ராஜகிரியவில் வைத்து, பிரகீத் எக்னெலிகொடவைக் கடத்திச் சென்ற குழுவில் இவரும் ஒருவர் என்று  குற்றப் புலனாய்வுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரகீத் எக்னெலிகொட கடத்திச் செல்லப்படும் போது, ஒரு சார்ஜன்ட் தர அதிகாரியாக இருந்த அபேரட்ண என்ற இந்த அதிகாரி, பின்னர் திடீரென லெப்டினன்ட்டாக பதவி உயர்த்தப்பட்டிருந்தார்.

ஏற்கனவே இவரிடம் இந்தச் சம்பவம் தொடர்பாக, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி, வாக்குமூலம் பெற்ற பின்னர் விடுவித்திருந்தனர்.

முன்னர் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, இவர், பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட அன்று தாம் கிரித்தல இராணுவ முகாமில் இருந்து விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான கேள்விப்பத்திரங்களைக் கோருவதற்காக கொழும்புக்கு, வந்திருந்ததாக கூறியிருந்தார்.

முதலில் பொரளைக்குச் சென்று, தனது நண்பரைச் சந்தித்து விட்டு, விலை மனுக்களைப் பெறுவதற்காக பத்தரமுல்லைக்குச் சென்றதாகவும், அன்றைய நாளே தாம் கிரித்தல முகாமுக்குத் திரும்பி விட்டதாகவும் அவர் அந்த விசாரணையில் தெரிவித்திருந்தார்.

ஆனால், அபேரட்ணவின் தொலைபேசித் தரவுகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஆய்வு செய்த போது, எக்னெலிகொட கடத்தப்பட்ட அன்று அவர் கொழும்பு வரவில்லை என்று கண்டறிந்ததையடுத்து, நேற்று முன்தினம் அவரைக் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளில், தாம் சந்தித்த நண்பர் யார் என்பதையோ, விளையாட்டு உபகரணங்கங்களைக் கொள்வனவு செய்வதற்காக விலைமனுக்களை பெற்ற கடையினது பெயரையோ வழங்க தவறியுள்ளார்.

இதையடுத்து அவர் ஹோமகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *