ஜே.ஆர்.தொடக்கம் மகிந்த வரை – அச்சிடத் தயார் நிலையில் மகாவம்ச நூலின் புதிய பதிப்பு
மகாவம்ச நூலின் மேலதிக இணைப்பாக, ஜே.ஆர். ஜெயவர்த்தன காலம் தொடக்கம் மகிந்த ராஜபக்சவின் காலம் வரையான புதிய பகுதிகள் அச்சிடப்படவுள்ளன.
சிங்களவர்களின் வரலாற்றைக் கூறும் மகாவம்ச நூலில் புதிய பகுதிகளாக நவீன சிறிலங்காவின் அரசியல் வரலாற்றை இணைக்கும் முயற்சிகள், மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலம் தொடக்கம், மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலம் வரையான காலப் பகுதியை (1978 தொடக்கம் 2010 வரை) உள்ளடக்கியதாக இந்தப் புதிய இணைப்பு அச்சிடப்படவுள்ளது.
உள்நாட்டு விவகார, வயம்ப அபிவிருத்தி, மற்றும் கலாசார அமைச்சினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இந்த தகவல் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஜே.ஆர். ஜெயவர்த்தன, ஆர்.பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகிய சிறிலங்காவின் முன்னாள் அதிபர்களின் ஆட்சிக்காலப் பகுதி மகாவம்சத்தின் புதிய இணைப்பில் இடம்பெறவுள்ளது.
அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் குறித்தும் இதில் விரிவான விபரங்கள் இடம்பெறவுள்ளன.