அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் சிறிலங்காவுக்கு திடீர் பயணம்
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் இன்று காலை சிறிலங்காவுக்குத் திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளும், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளும் வரவேற்றனர்.
சிறிலங்கா வந்துள்ள நிஷா பிஸ்வால், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, உள்ளிட்ட சிறிலங்காவின் முக்கிய அரசாங்க தரப்பினருடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
சிறிலங்காவில் கடந்த ஜனவரி மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், நிஷா பிஸ்வால் கொழும்புக்கு மேற்கொள்ளும் நான்காவது பயணம் இதுவாகும்.
இவர் இம்முறை எத்தனை நாட்கள் தங்கியிருப்பார் என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.
நிஷா பிஸ்வாலின் இந்தப் பயணத் திட்டம் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.