சிறிலங்கா மாநாட்டைப் புறக்கணித்த எலிசபெத் மகாராணி மோல்டாவுக்கு செல்கிறார்
சிறிலங்காவைப் புறக்கணித்த பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத், நாளை கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்க, மோல்டாவுக்குச் செல்லவுள்ளார்.
மோட்டாவில் நாளை கொமன்வெல்த் தலைவர்களின் 24ஆவது உச்சி மாநாட்டை பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் துவக்கி வைக்கவுள்ளார்.
கொமன்வெல்த் அமைப்புக்கு சம்பிரதாய ரீதியாகத் தலைமை தாங்கும், பிரி்த்தானியாவின் முடிக்குரிய மகாராணி, 2011ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவிலும் அதற்கு முன்னர் நடந்த கொமன்வெல்த் உச்சி மாநாடுகளிலும் கலந்து கொண்டார்.
எனினும், கடந்த 2013ஆம் ஆண்டு சிறிலங்காவில் நடந்த கொமன்வெல்த் உச்சிமாநாட்டில் பிரித்தானிய மகாராணி பங்கேற்கவில்லை.
மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சிறிலங்காவில் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் உலகெங்கும் ஒலித்த நிலையில், பிரித்தானிய மகாராணி, இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.
உடல் நிலையைக் காரணம் காட்டி, சிறிலங்கா வருவதை தவிர்த்த பிரித்தானிய மகாராணி, தனது பிரதிநிதியாக, பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சார்ள்சை கொமன்வெல்த் மாநாட்டுக்கு அனுப்பியிருந்தார்.
எனினும், இரண்டு ஆண்டுகள் கழித்து மோல்டாவில் நாளை ஆரம்பமாகும் கொமன்வெல்த் உச்சிமாநாட்டை பிரித்தானிய மகாராணி துவக்கி வைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலையைக் காரணம் காட்டி, மொரிசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம், கொழும்பில் நடந்த கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.