மேலும்

“உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”

palakai-6th-year2009ஆம் ஆண்டு, சூறைகாற்று சுழன்றடித்து, ஈழத் தமிழினத்தை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருந்த தருணத்தில், இதே நாளில் தொடங்கியது இந்தப் பயணம்.

ஆறு ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

அறி – தெளி – துணி என்ற இலக்குடன், புயலிடை ஒரு தோணியாய் புறப்பட்ட இந்தப் பயணம் சந்தித்த தடைகள், தடங்கல்கள் ஏராளம்.

வணிக நோக்கிற்கு அப்பாற்பட்டு நின்றதால், இவையெல்லாம் எம்முன் மலைகளாகவே தெரிந்தன.

ஒவ்வொரு தடைகளையும் தாண்டி புதினப்பலகையைத் தலைநிமிர வைப்பதில், மறைந்த ஆசிரியர் கி.பி.அரவிந்தன் அவர்களின் பங்கு அளப்பரியது. அசாதாரணமானது.

கைகோர்த்து வந்தவர்கள், இடைநடுவில் கைவிட்டுப் போனபோதும், கலங்காமல், துணை நின்று வழிநடத்தியவர் அவர்.

2015 மார்ச் 8ஆம் நாள், கொடிய நோய்க்கு, அவரையும் இழந்த போது, திக்கற்றவர்களாய்த் தான் எமை உணர்ந்தோம்.

புதினப்பலகையை வழிநடத்திய அவரது இழப்பு ஒரு பெருந்துயர்.

அந்தத் துயரையும் தாண்டி நாம் நகர வேண்டியிருந்தது.

கி.பி.அரவிந்தன் அவர்களுக்கு கண்ணீராலோ, மலர்களாலோ, வார்த்தைகளாலோ, எழுத்துகளாலோ செலுத்தும் அஞ்சலி, பொருத்தமுடையதாக இருக்கும் என நாம் நம்பவில்லை.

அவருடன் இணைந்து பயணித்த நாம், அவரது பயணத்தை தொடர்வதே சிறந்த அஞ்சலியாக கருதினோம்.

ki-pi-bookநான்கு பத்தாண்டுகளாக, தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும், பல்வேறு வழிமுறைகளின் ஊடாக போராடிய அவர், கடைசியாக தெரிவு செய்த ஆயுதம் தான், எழுத்து.

புதினப்பலகையை அதற்கான களமாக அவர் பயன்படுத்தினார்.

ஈழத் தமிழினத்தின் விடிவுக்கான நெருப்பாற்றில், ஒரு சிறு தோணியாகப் பயணிப்பதே புதினப்பலகையின் இலக்கு.

அந்த இலக்கில் பெரிதாக நாம் எதையும் சாதித்து விட்டதாக மார்தட்ட முடியாது.

வணிக நோக்கத்தை முன்னிறுத்திய ஊடகப் பரப்பில் இருந்து விடுபட்டு, செய்திகளிலாயினும், கட்டுரைகளிலாயினும், எமக்கான தனித்துவ அடையாளத்தை பேணுவதில் வெற்றி கண்டிருப்பதாகவே உணர்கிறோம்.

எமது செய்திகளையும், கட்டுரைகளையும் பிரதி செய்து வெளியிடுவதில், தம்மை முன்னணி ஊடகங்களாக கூறிக்கொள்ளும், இணைய, அச்சு ஊடகங்கள் காட்டும் அதீத ஆர்வமே அதற்குச் சான்று.

ஆறு ஆண்டுகளைக் கடந்து, ஏழாவது ஆண்டுக்குள் நுழையப் போகும் தருணத்தில், ஒன்றை மட்டும் கூறுகின்றோம், – “ ஊடக அறநெறியில் இருந்து விலகாத வகையில், தமிழ்த் தேசிய இனத்தின் நலனுக்காக புதினப்பலகை தொடர்ந்து பயணிக்கும்.”

அது தான் கி.பி.அரவிந்தன் அவர்களின் கனவு.

ஆறு ஆண்டுகளில் நாம் விழுந்தாலும் எழுந்தோம், புதைந்தாலும் புதிதாக முளைகொண்டோம்.

இந்தவேளையில், நாம் மறைந்த கி.பி.அரவிந்தன் அவர்களின் எழுத்துகளின் ஊடே ஓர் உறுதியை கூறுகின்றோம்.

“ உயிர்ப்பேன்…

உங்களிடை இருப்பேன்.

கைகள் கொள்ளா

கலைச் செல்வங்கள் காவியும்

நெஞ்சுமுட்ட

அன்புதனை நிறைத்தும்

நேசக் கடல் நாடி

வருவேன்.”

– புதினப்பலகை குழுமத்தினர்
17.11.2015

4 கருத்துகள் ““உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ””

  1. Sumathri Francis
    Sumathri Francis says:

    ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புதினப்பலகை தொடர்ந்து வெற்றிநடை போட எமது வாழ்த்துகள்! புதினப்பலகை குழுமத்தினர் நல்ல முறையில் கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கையில் தான் அவர் உயிர் பிரிந்திருக்கிறது. அவர் உங்களுக்குள் இருந்து வழி நடத்திக் கொண்டேயிருப்பார்.!!

  2. arni narendran says:

    As Puthinapalakkai walks into its seventh year of existance while diffusing Free and Fair News to all its constituents, we remember the contribution of the Late Thiru Aravindan the founder of the web site. May we perpuate his memory in continuing to fulfill his vision , and carry forward the good work.

  3. ankayatkanny s says:

    valtha vaai undu. ninaithu vaalum manam undu
    sernthu nadanthu pirinthu
    thodarum payanam tharum
    mudpattai kaduhal anaithum
    vedi veelthum vallamai
    suthanthiram samathuvam sahotharathuvam
    puthinaam aravinthan sivakumaran
    ninaivuhaludan unkalai vaalthuhiren
    nanri

  4. thiagarajah wijayendran says:

    புத்தாண்டு வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *