கொழும்பு வந்தது சோபித தேரரின் உடல் – வரும் 12ஆம் நாள் தேசிய துக்க நாளான பிரகடனம்
சிங்கப்பூர் மருத்துவமனையில் நேற்று அதிகாலையில் காலமான, சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தேசிய அழைப்பாளர் வண.மாதுளுவாவே சோபித தேரரின் உடல் நேற்றிரவு கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் நேற்றிரவு 9.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல் இன்று அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
சோபித தேரரின் இறுதிச்சடங்கு வரும் 12ஆம் நாள் நாடாளுமன்றச் சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, அன்றைய நாளை தேசிய துக்கநாளாக கடைப்பிடிக்குமாறு சிறிலங்கா அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
மாதுளுவாவே சோபித தேரரின் மறைவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமும் இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.