சிறிலங்கா குறித்த விசாரணை அறிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது – அல் ஹுசேன்
சிறிலங்கா தொடர்பான தமது பணியகத்தின் விசாரணை அறிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா பொதுச்சபையின் 70ஆவது கூட்டத் தொடரின் 3ஆவது குழுக் கூட்டத்தில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின், 2014 ஓகஸ்ட் தொடக்கம் 2015 ஜுலை வரையிலான, செயற்பாடுகள் குறித்த அறிக்கையை நேற்று சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“அண்மைய வாரங்களில், எனது பணியகம் சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் தொடர்பான வரலாற்று ரீதியான ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணைக்கு அமைய, ஆயுதப் போரில் இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எனது ஆண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள காலப் பகுதியில், சிறிலங்கா, மத்திய ஆபிரிக்க குடியரசு, பாலஸ்தீனம் தொடர்பான விசாரணைக் குழுக்கள், உண்மை கண்டறியும் குழுக்களுக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் ஆதரவளித்துள்ளது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.