மேலும்

கனடா நாடாளுமன்றத் தேர்தல் – ஹரி ஆனந்தசங்கரி வெற்றி, ராதிகா தோல்வி

hari-anandasangareகனேடிய நாடாளுமன்றத்துக்கு நேற்று நடந்த தேர்தலில் லிபரல் கட்சி முன்னணியில் இருக்கும் நிலையில் அந்தக் கட்சியின் சார்பில் ஸ்காபரோ ரூஜ் பார்க்  தொகுதியில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 4294 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஸ்காபரோ ரூஜ் பார்க்  தொகுதியில் ஹரி ஆனந்தசங்கரி 7,780 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே தொகுதியில் தேசிய ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட மற்றொரு ஈழத் தமிழரான சக்திகுமார் 1317 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

இதனிடையே ஸ்காபரோ நோர்த் தொகுதியில் தேசிய ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்டு கடந்தமுறை வெற்றி பெற்ற ராதிகா சிற்சபைஈசன் இம்முறை தோல்வியடைந்துள்ளார். அவர் 3,850 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தையே பிடித்துள்ளார்.

லிபரல் கட்சி வேட்பாளர் சான் சென் 7,647 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கொன்சர்வேட்டிவ் வேட்பாளர், ரவிந்தர் மால்கி 4,748 வாக்குகளுடன் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.

ஸ்காபரோ தெற்மேற்கு தொகுதியில் கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மற்றொரு ஈழத் தமிழரான ரொசான் நல்லரத்தினம்,2369 வாக்குகளைப் பெற்று மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளார். இந்த தொகுதியில் லிபரல் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

மார்க்கம் தோர்ன்ஹில் தொகுதியில் தேசிய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட செந்தி செல்லையா என்ற ஈழத்தமிழர்,1,085 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். இங்கு லிபரல் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். செந்தி செல்லையா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

பிராம்டன் மேற்கு தொகுதியில் பசுமைக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட, ஈழத் தமிழரான கார்த்திகா கோபிநாத்தும் இந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

இங்கு லிபரல் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ள நிலையில், கார்த்திகா கோபிநாத் 365 வாக்குகளை மட்டும் பெற்று, மூன்றாவது இடத்தையே பிடித்துள்ளார்.

அதேவேளை, இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள; மற்றும் முன்னணி நிலவரங்களின் அடிப்படையில் லிபரல் கட்சி அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் நிலையில் உள்ளது.

லிபரல் கட்சி  இதுவரை 174 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதுடன். மேலும் 10 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது.

ஆட்சியில் இருந்த கொன்சர்வேட்டிவ் கட்சி 93 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளதுடன், மேலும் 8 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

31 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தேசிய ஜனநாயக கட்சி மேலும் 10 இடங்களில் முன்னணியில் இருக்கிறது. புளொக் கியூபெக்கோஸ் கட்சி 8 தொகுதிகளில் வென்று மேலும் 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

338 பேரைக் கொண்ட நாடாளுமன்றத்தில், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கத் தேவையான, ஆசனங்களை லிபரல் கட்சி பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *