ஐ.நாவுக்கான தூதரகத்துக்கு இராணுவ ஆலோசகரை சிறிலங்கா நியமித்தது ஏன்?
ஐ.நாவில் சிறிலங்காவின் அமைதிகாப்பு முயற்சிகளை ஒருக்கிணைக்கவே, நியூயோர்க்கில் உள்ள, ஐ.நாவுக்கான சிறிலங்கா தூதரகத்தில், புதிதாக இராணுவ ஆலோசகர் பதவி உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் பணயகத்தில், புதிதாக இராணுவ ஆலோசகர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, அந்தப் பதவிக்கு, சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் உபய மெடவெல நியமிக்கப்பட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் உபய மெடவெல இந்தப் பதவியை அடுத்த சில நாட்களில் ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நாவுக்கான தூதரகத்தில் இராணுவ ஆலோசகர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டது தொடர்பாக கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பதில் ஊடகப் பணிப்பாளர் சத்யா ரொட்ரிகோ விளக்கமளித்துள்ளார்.
இதன்படி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அண்மையில் ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்றதையடுத்தே இந்தப் புதிய பதவி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், ஐ.நாவின் அமைதிகாப்பு முயற்சிகளில் சிறிலங்காவின் பங்களிப்பை வலுப்படுத்த வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்தே நியூயோர்க்கில் உள்ள துதரகத்தில் இராணுவ ஆலோசகர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.
இவர், ஐ.நாவில் சிறிலங்காவின் அமைதிகாப்பு முயற்சிகளை ஒருங்கிணைப்பார்.
இந்த இராணுவ செயற்பாடுகளை ஒருங்கிணைக்க எமக்கு தொழில்நுட்ப நிபுணர்கள் தேவையில்லை. மேஜர் ஜெனரல் மெடவெலவினால் இந்தப் பங்களிப்பை திறமையாக மேற்கொள்ள முடியும்.
அவர், பல்வேறு நாடுகளின் இராணுவ அமைப்புகளை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் ஒருங்கிணைத்துப் பணியாற்றியவர்” என்று குறிப்பிட்டார்.
சிறிலங்காவின் முப்படைகளும் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றி வருகின்றன.
ஐ.நா அமைதிப்படையில் 5 ஆயிரம் சிறிலங்கா படையினரை இணைத்துக் கொள்ள அரசாங்கம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.