மேலும்

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வு

Major General N.A Jagath C Diasஇறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தவர் என்ற அனைத்துலக மட்டத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் உள்ளிட்ட சிறிலங்கா இராணுவத்தின் மூன்று முக்கிய அதிகாரிகள் ஓய்வு பெறவுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாகப் பணியாற்றும் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், தொண்டர் படைகளின் தளபதியான மேஜர் ஜெனரல் லலித் தவுலகல, மற்றும் ஆட்டிலறிப் படைப்பிரிவின் தளபதியாக உள்ள மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க ஆகியோரே விரைவில் ஓய்வுபெறவுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இவர்களில், மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், இறுதிக்கட்டப் போரில், 57ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றியிருந்தார்.

இவரது படைப்பிரிவு, வன்னியில், பொதுமக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள், பாதுகாப்பு வலயங்கள் மீதான பீரங்கித் தாக்குதல் உள்ளிட்ட போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகவும், அதற்கு இவர் பொறுப்பாக இருந்தவர் என்றும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சுவிற்சர்லாந்துக்குள் இவர் நுழைந்தால், போர்க்குற்ற வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்று, அந்த நாட்டின் நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக அண்மையில் இவர் நியமிக்கப்பட்ட போது, அதற்கு அனைத்துலக மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை தற்போதைய அரசாங்கம் எதிர்கொண்டிருந்தது.

போர்க்குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு இராணுவத்தில் உயர் பதவி அளிக்கப்பட்டது குறித்து அனைத்துலக மனித உரிமை அமைப்புகளும், இராஜதந்திர மட்டங்களும், கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *