அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்
தம்மை பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்கக் கோரி தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம், சிறிலங்கா அதிபரின் உறுதிமொழியை அடுத்து இன்று தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மகசின் சிறைச்சாலைக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் அரசியல் கைதிகளுடன் நடத்திய பேச்சுக்களை அடுத்தே, அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோகண புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
வரும் 7ஆம் நாளுக்குள், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் என்று சிறிலங்கா அதிபர் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச மூலம் கொடுத்துள்ள வாக்குறுதி தொடர்பாக அரசியல் கைதிகளுக்கு, இரா. சம்பந்தன் எடுத்துக் கூறியதை அடுத்தே, தமது போராட்டத்தை் இடைநிறுத்த அவர்கள் சம்மதித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
தமது போராட்டம், அடுத்த மாதம் 7ஆம் நாள் வரையே இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அரசியல் கைதிகள் தெரிவித்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.