சிறிலங்கா அதிபரின் வாக்குறுதியை அரசியல் கைதிகள் நிராகரிப்பு
தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரத்துக்கு அடுத்த மாதம் 7ஆம் நாளுக்குள் தீர்வு காண்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அளித்துள்ள வாக்குறுதியை ஏற்க, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
நேற்றுக் காலையில் சிறிலங்காவின் நீதிஅமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சந்தித்துப் பேச்சு நடத்திய போது, அடுத்த மாதம் 7ஆம் நாளுக்குள் இந்த விடயத்திற்கு நிரந்தர தீர்வை வழங்குவதாக சிறிலங்கா அதிபர் கூறியிருந்தார்.
எனினும், அதுதொடர்பாக தமக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், தமது போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுடும் என்று அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கா அதிபரிடம் இருந்து அதிகாரபூர்வமான பதில் கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
அதேவேளை, தமது விடுதலை தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்றும் அரசியல் கைதிகள் வலியுறுத்தியுள்ளனர்.