மேலதிக நிதியுதவிகளை அனைத்துலக நிதி நிறுவனங்களிடம் கோரவுள்ளது சிறிலங்கா
சிறிலங்காவுக்கு மேலதிக நிதி உதவிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக, உலக வங்கி மற்றும் அனைத்துலக நாணய நிதியத்துடன் பேச்சுக்களை நடத்த, சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பெருவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
பெரு தலைநகரான லிமாவில், உலக வங்கி குழு மற்றும் அனைத்துலக நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டம் வரும் 9ஆம் நாள் தொடக்கம், 11ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமையிலான குழுவொன்று லிமாவுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றது.
இந்தக் குழுவில்,மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரன், திறைசேரி மற்றும் நிதியமைச்சின் செயலர் கலாநிதி சமரதுங்க ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள், சிறிலங்காவுக்கு மேலதிக நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக, உலக வங்கி மற்றும் அனைத்துலக நாணய நிதியத்துடன் பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.
இந்த இரண்டு நிதி நிறுவனங்களிடம் இருந்தும் சிறிலங்கா ஆண்டு தோறும், 400 மில்லியன் டொலர் பெறுமதியான நீண்டகால உதவிகளைப் பெற்று வருகிறது.
இந்த ஆண்டு கலந்துரையாடலில் சிறிலங்காவுக்கான வருடாந்த நிதியுதவியை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.