மேலும்

ஜெனிவாவில் தொடங்கியது சிறிலங்கா குறித்த விவாதம்

UNHRC-meeting-roomஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்த விவாதம் சற்று  நேரத்துக்கு முன்னர் ஆரம்பமாகியது.

ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சற்று முன்னர்- சிறிலங்கா நேரப்படி, மாலை 6 மணியளவில், இந்த விவாதம் ஆரம்பமாகியது.

இந்த விவாதத்தின் தொடக்கத்தில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனின் அறிக்கை, காணொலி மூலம் திரையிடப்படுகிறது.

unhrc

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, அதற்குப் பதிலளிக்க சிறிலங்காவுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவுக்கான சிறிலங்கா பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு பதிலளித்து உரையாற்றினார். அவருக்கு உரையாற்ற  5 நமிடங்கள் வாய்ப்பளிக்கப்பட்டது.

இதன் போது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்குவதாகவும், தீர்மானத்தின்  பரிந்துரைகளை நிறைவேற்ற ஒத்துழைப்பதாகவும் சிறிலங்கா பிரதிநிதி தெரிவித்தார்.

இதையடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி, அயர்லாந்துப் பிரதிநிதி ஆகியோரின் உரைகள் இடம்பெற்றன.

இதன் பின்னர், சிறிய இடைவேளைக்குப் பின்னர், தொடங்கிய 38ஆவது கூட்டத்தில், தென்கொரியப் பிரதிநிதி உரையாற்ற முதலில் வாய்ப்பளிக்கப்பட்டது.

அதையடுத்து சியராலியோன்,ரஷ்யா, ருமேனியா,ஜப்பான், எஸ்தோனியா,மொன்ரெனிக்ரோ, பிரான்ஸ், மசிடோனியா,  வியட்னாம், பாகிஸ்தான், அமெரிக்கா,அல்பேனியா, தாய்லாந்து, அவுஸ்ரேலியா, கனடா, சுவிற்சர்லாந்து, மியான்மார், பிஜி, நோர்வே, டென்மார்க், ஈரான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றினர்.

இதையடுத்து, யுனிசெப் பிரதிநிதிக்கு உரையாற்ற வாய்ப்பளிக்கப்பட்டது. தொடர்ந்து, அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு உரையாற்ற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதன் போது, வடமாகாணசபை உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திர குமார் பொன்னம்பலம் மற்றும் அன்புமணி இராமதாஸ் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையை பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகளும், அனைத்து அரசசார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளும் வரவேற்று கருத்துக்களை வெளியிட்டனர்.

இதையடுத்து, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் உதவி ஆணையாளர் பதிலுரை நிகழ்த்தியதுடன் இந்த விிவாதம் முடிவுக்கு வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *