கொழும்பில் ஐதேக ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி, 12 பேர் காயம்
கொழும்பில் கொட்டாஞ்சேனைப் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஐதேக ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 12 பேர் காயமடைந்தனர்.
கொட்டாஞ்சேனை புளூமென்டல் வீதியில் சென்.பெனடிக்ட் மைதானம் அருகே, இன்று நண்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர் ஒரு பெண் என்று சிறிலங்கா காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
காயமடைந்தவர்கள், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரவி கருணாநாயக்கவும் அந்தப் பகுதியிலேயே பரப்புரையில் ஈடுபட்டிருந்தார் என்றும், எனினும் அவர் சம்பவ இடத்தில் இருக்கவிலலை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இலக்கத்தகடு இல்லாத இரண்டு கறுப்பு நிற வாகனங்களில் வந்தவர்களே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
காயமடைந்த 12 பேர் உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இடம்பெற்றுள்ள – முதல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – மிக மோசமான தேர்தல் வன்முறை இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது.