கொழும்பிலுள்ள பிரித்தானிய இராஜதந்திரிகளுக்கு லண்டனில் இருந்து வந்துள்ள எச்சரிக்கை
சிறிலங்கா விமானப்படையினரால் நடத்தப்படும் உள்நாட்டு விமான சேவையான ஹெலி ருவர்ஸ் விமானங்களில் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று, பிரித்தானிய இராஜதந்திரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
காலாவதியான வான் பாதுகாப்பு சான்றிதழ்களை வைத்து இந்த விமான சேவை நடத்தப்படுவதாலேயே, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் தனது இராஜதந்திரிகளுக்கு இந்த ஆலோசனையை வழங்கியுள்ளது.
கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரக அதிகாரிகளுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல் லண்டனில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தயாரிப்பு பெல்- 412 உலங்கு வானூர்திகள், சீனத் தயாரிப்பு எம்,ஏ -60 விமானங்களை இந்த நிறுவனம் உள்நாட்டு விமான சேவைக்காக பயன்படுத்தி வருகிறது.
இரத்மலானை- பலாலி, இரத்மலானை – திருகோணமலை, திருகோணமலை- பலாலி இடையே ஹெலி ருவர்ஸ் நிறுவனம் விமான சேவைகளை நடத்தி வருகிறது.
சிறிலங்கா விமானப்படை, போருக்காக வாங்கிய உலங்குவானூர்திகள் மற்றும் போக்குவரத்து விமானங்களை, இந்த உள்நாட்டு விமானச் சேவைக்குப் பயன்படுத்தி வருகிறது.
எனினும், இந்த விமானங்களைப் பொதுமக்களின் சேவைக்குப் பயன்படுத்துவதற்கான உரிய சான்றிதழ்கள் பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது.