மைத்திரியின் அணிவகுப்புக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியில் ரவை – பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்பு
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் அணிவகுப்பில் ஈடுபட்டிருந்த கடெற் மாணவரின் துப்பாக்கியில், ரவை ஒன்று சிக்கியிருந்ததை, சிறிலங்கா அதிபரின் பாதுகாப்புப் பிரிவினர் கண்டறிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கம்பகா பண்டாரநாயக்க கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்வில் மைத்திரிபால சிறிசேன பங்கேற்றிருந்தார். அவருக்கு கடெற் மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அந்த அணிவகுப்பில் பங்கேற்றிருந்த மாணவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் அதிபர் பாதுகாப்புப் பிரிவினரால் சோதனையிடப்பட்டது.
அப்போது, ஒரு துப்பாக்கியில், ரவை ஒன்றின் பாகம் சிக்கியிருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த துப்பாக்கியில் இருந்து ரவையின் பாகம் அகற்றப்பட்டது.
இதையடுத்து, கடெற் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை சிறிலங்கா அதிபருக்கு அளிக்கப்பட்டது. எனினும் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எனினும், இது சிறிலங்கா அதிபரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு சம்பவம் அல்ல என்று அதிபர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.