கோத்தா படுகொலை முயற்சி – குற்றத்தை ஒப்புக்கொண்ட மைத்திரிக்கு 6 மாத சிறைத்தண்டனை
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைப் படுகொலை செய்ய முயன்ற வழக்கில், சிங்களவர் ஒருவருக்கு ஆறு மாத கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் நாள், கோத்தாபய ராஜபக்சவைப் படுகொலை செய்ய விடுதலைப் புலிகளின் உறுப்பினர் சுரேஸ்குமார் முயற்சி மேற்கொண்டிருந்தார்.
அவருடன் தொடர்பு வைத்திருந்த கம்பகாவைச் சேர்ந்த மைத்திரி சமன் குமார என்பவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
கோத்தாபய ராஜபக்சவை படுகொலை செய்யும் விடுதலைப் புலிகளின் முயற்சி தொடர்பாக தகவல் வழங்கத் தவறிய குற்றத்தை இவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, மைத்திரி சமன் குமாரவுக்கு ஆறு மாத கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.