தேர்தல் கண்காணிப்புக்கு அதிகளவு பிரதிநிதிகளை அனுப்பும் மேற்கு நாடுகள்
வரும் நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க, 40 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் அழைக்கவுள்ளது.
வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடைபெறவுள்ள தேர்தலைக் கண்காணிக்க, வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கு தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அழைப்பை ஏற்று சுமார் 40 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் ஓகஸ்ட் முதல் வாரத்தில் கொழும்பு வரவுள்ளனர்.
அமெரிக்கா, அவுஸ்ரேலியா, கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களே இந்தக் குழுவில் இடம்பெறவுள்ளனர்.
அதேவேளை, ஏற்கனவே தேர்தல்கள் ஆணையாளரின் அழைப்பின் பேரில், ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழுவின் முதல் தொகுதி சிறிலங்கா வந்துள்ளது.
2005ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழு முதல் முறையாக சிறிலங்கா வந்துள்ளது.
மகிந்த ராஜபக்சவின் பதவிக்காலத்தில், ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழு, தேர்தல் கண்காணிப்புக்கு அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.