அமெரிக்க அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கவில்லை – முதலமைச்சர் விக்னேஸ்வரன்
இனப்படுகொலை விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அடக்கி வாசிக்குமாறு, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தமக்கு அழுத்தம் கொடுத்ததாக வெளியான செய்தியை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார்.
அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கடந்தவாரம் அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலை சந்தித்துப் பேசியிருந்தார்.
இதன் போது, இனப்படுகொலை குறித்து அடக்கி வாசிக்கும்படி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால், வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அறிவுறுத்தப்பட்டதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இந்தச் செய்தி தவறதானது என்றும், நிஷா பிஸ்வால் அவ்வாறு கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர்.
லண்டனில் நடந்த நிகழ்வு ஒன்றில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் எதிர்பார்ப்புகளையும் உதாசீனம் செய்யமாட்டோம் என்றும், அவர்களின் நல்வாழ்விற்காக தாங்கள் தொடர்ந்து உழைப்போம் என்றே நிஷா பிஸ்வால் தன்னிடம் கூறியதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.