சம்பந்தனிடம் தேசியப் பட்டியல் ஆசனம் கோரும் மூதூர் முஸ்லிம்கள்
கிழக்கில், மட்டுமன்றி வட-கிழக்கிலும் கூட முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே இருக்கிறது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மூதூர் அரசியல் விழிப்புணர்வு ஒன்றியத்தின் முஸ்லிம் பிரமுகர்களுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று மூதூரில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் பங்கேற்ற மூதூர் அரசியல் விழிப்புணர்வு ஒன்றியத்தின் பிரமுகர்கள், மூதூரைச் சேர்ந்த ஒருவருக்கு நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை தேசியப்பட்டியல் மூலம் பெற்றுத் தருமாறு இரா. சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்தனர்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது பட்டியலில் மூதூரைச் சேர்ந்த வேட்பாளருக்கு இடமளிக்காமல் ஏமாற்றி விட்ட விசனம் தெரிவித்த அவர்கள், தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து, ஒரு பிரதிநிதித்துவத்தை பெற்றுத் தருவதற்கு உதவுவதாகவும், அதற்குப் பதிலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியப்பட்டியலில் மூதூருக்கு இடமளிக்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதற்குப் பதிலளித்த இரா.சம்பந்தன், ‘கிழக்கில், மட்டுமன்றி வட-கிழக்கிலும் கூட முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே இருக்கிறது.
படித்த, பக்குவமான, கருமங்களை சரியாக கையாளக் கூடிய ஒரு முஸ்லிம் வடகிழக்கின் முதலமைச்சராக வருவாராயின் அவரை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம்.
நாங்கள், நேர்மையாக- தூய்மையாக- நிதானமாக நடப்போம். நாம் முஸ்லிம் மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம். எம்மால் இயன்றளவுக்கு முஸ்லிம்களுக்காக கடமையாற்றுவோம்.
உங்களின் ஆதரவை எமக்குத் தாருங்கள். அதன் மூலம் முஸ்லிம் தலைவர்களுக்கு தெளிவான ஒரு செய்தியை அனுப்புங்கள். உங்களின் சமூகம் நிமிர்ந்து நிற்கும்.
வேட்புமனுக்கள் நிறைவடைந்து விட்ட போதும், உங்களை நான் கைவிட மாட்டேன். முஸ்லிம்- தமிழ் மக்களின் உறவுகளை வலுப்படுத்த எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யத் தயாராக இருக்கிறோம்.
2016ஆம் ஆண்டு முடிவதற்குள், தமிழ்,முஸ்லிம் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய அரசியல் தீர்வு ஒன்று காணப்படும். அதனை இரண்டு சமூகங்களும் இணைந்து அனுபவிக்கும் நிலை நிச்சயம் உருவாகும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் வாதிகள் என்றும் அரசியல் வாதிகளே, இவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவா வேண்டும், கூட்டணி இவரின் சொத்தா கொடுக்காமல் இருக்க,