சிறிலங்கா – இந்தியா இடையிலான மேம்பாலத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி பச்சைக்கொடி
இராமேஸ்வரத்தையும் தலைமன்னாரையும் இணைக்கும் தலைவழிப்பாதையை அமைப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வழங்கி நிதி உதவி வழங்கத் தயாராக இருப்பதாக இந்திய அரசாங்கத்துக்குத் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மத்திய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்காரி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
நேற்று மதுரை மற்றும் சுசீந்திரத்தில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
இந்திய மத்திய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட 23ஆயிரம் கோடி ரூபா செலவில், இந்தியாவையும் சிறிலங்காவையும் தரைவழிப் போக்குவரத்துப் பாதையால் இணைக்கும் திட்டம் குறித்து சாத்திய ஆய்வை மேற்கொள்ள இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இராமேஸ்வரத்துக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பாரிய மேம்பாலம் ஒன்றை அமைப்பதற்கு இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம் தொடர்பாக, ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி இந்தத் திட்டத்துக்கு நிதி அளிக்கத் தயாராக இருக்கிறது.
அயல்நாடுகளுடன் தரைவழிப் போக்குவரத்து இணைப்பை மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டத்தின் ஒரு பகுதியே இதுவாகும்.” என்றும் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.