சீனாவின் கடன்களை ரத்துச் செய்யும் திட்டமில்லை – என்கிறது சிறிலங்கா அரசாங்கம்
சீனாவிடம் பெறப்பட்ட கடன்களை ரத்துச் செய்யும் திட்டம் எதுவும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கிடையாது என்று அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன,
“சீனாவிடம் பெறப்பட்ட கடன்களை ரத்துச் செய்யும் திட்டம் எதுவும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கிடையாது. இந்தக் கடன்கள் நாட்டின் அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமானவை.
சீனக் கடன்கள் தொடர்பான விதிமுறைகள் தொடர்பாக மீள் இணக்கப்பாடு செய்து கொள்கிறோமே தவிர, இந்தக் கடன்களில் இருந்து விடுபடும் திட்டம் ஏதும் கிடையாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சீனாவிடம் கூடுதல் வட்டியில் பெறப்பட்ட கடன்களை அடைப்பதற்கு, சிறிலங்கா அரசாங்கம், ஏனைய நாடுகளிடம் கடன் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றிடம் இருந்தே, சீனாவின் கடன்களை அடைப்பதற்கான குறைந்த வட்டியிலான நீண்டகாலக் கடன்களை பெற முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா நிதி அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.