மேலும்

குருநாகல மாவட்டத்தில் மகிந்தவை எதிர்த்துப் போட்டியிடுவது ஏன்? – சிவாஜிலிங்கம் பதில்

sivajilingamசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கவே, அவர் போட்டியிடும் குருநாகல மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடுவதாக, வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில், குருநாகல மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சிவாஜிலிங்கம் கடந்த 13ஆம் நாள் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார்.

சிங்களவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் குருநாகல மாவட்டத்தில் தாம் போட்டியிடுவதற்கான காரணங்களை அவர் நேற்றிரவு பிபிசி தமிழோசைக்கு விபரித்தார்.

மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே குருநாகல மாவட்டத்தில் போட்டியிடுகிறேன்.

குருநாகல மாவட்டத்தில் எம்மால் வெற்றியீட்ட முடியாது என்பது யதார்த்தம் என்றாலும், மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்சவுக்கு அடையாள ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கிலேயே நானும், ஏனைய 18 தமிழர்களும் அங்கு சுயேச்சையாக போட்டியிடுகிறோம்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மகிந்த ராஜபக்சவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாய்ப்பளித்தது தவறு எனச் சுட்டிக்காட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயங்கியது.

அதைச் சுட்டிக்காட்ட வேண்டிய ஆழமான, உறுதியான தேவை இருப்பதாகக் கருதியதாலேயே நாடளுமன்றத் தேர்தலில் குருநாகல மாவட்டத்தில் போட்டியிட முடிவெடுத்தோம்.

வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே சுயேச்சையாகப் போட்டியிடுவதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனுமதியைப் பெற வேண்டிய தேவை எழவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *