மகிந்தவைக் காப்பாற்ற முனைந்து மாட்டிக் கொண்ட சுசில்
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு கொண்டு வர சதித் திட்டம் தீட்டப்பட்டதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சுமத்திய குற்றச்சாட்டை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்த நிராகரித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘மகிந்த ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு கொண்டு வந்திருக்க முடியாது.
ஏனென்றால், 1981ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல் சட்டப்படி, தேசியப்பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களை அல்லது, குறித்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்களையே தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க முடியும்.
ஆனால், 2010 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பிய தேசியப்பட்டியலில் மகிந்த ராஜபக்சவின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை. 2010 நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர் போட்டியிட்டிருக்கவில்லை.
எனவே, 2015இல் அவரைத் தேசியப்பட்டியலின் மூலம் நாடாளுமன்றத்துக்கு கொண்டு வர முடியாது.” என்றும் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்தார்.
அதேவேளை, தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்படாமல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல், 2007ஆம் ஆண்டு பசில் ராஜபக்ச தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதை, அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடந்த போது பசில் ராஜபக்ச அமெரிக்காவிலேயே இருந்தார்.
அவருக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்படவோ தேசியப்பட்டியலில் இடமளிக்கப்பட்டிருக்கவோ இல்லை.
2005இல் மகிந்த ராஜபக்ச அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போதே, பசில் ராஜபக்ச சிறிலங்கா வந்தார்.
2007இல் மகிந்த ராஜபக்சவின் அரசில் அமைச்சராக இருந்த அன்வர் இஸ்மாயில் மரணமானதையடுத்தே, அந்த வெற்றிடத்துக்கு தேசியப்பட்டியல் உறுப்பினராக பசில் ராஜபக்ச நியமிக்கப்பட்டார் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.