சுதந்திரக் கட்சி மத்தியகுழுக் கூட்டத்தை ரத்துச்செய்ய மைத்திரி உத்தரவு – தொடங்கியது பனிப்போர்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் அவசரக் கூட்டத்தை, சிறிலங்கா அதிபரும், சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன ரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டதையடுத்து, குழப்பமடைந்த, மகிந்த ராஜபக்ச தரப்பு சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் அனுர பிரியதர்சன யாப்பாவைப் பயன்படுத்தி இன்று கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இலங்கை மன்றக் கல்லூரியில் இன்றிரவு 8 மணிக்கு நடக்கவிருந்த இந்தக் கூட்டத்தை, ரத்துச் செய்யுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
எனினும், மைத்திரிபால சிறிசேனவை கட்சித் தலைமையில் இருந்து நீக்கும் முடிவை மகிந்த தரப்பு எடுத்தால், அவரது உத்தரவை மீறி செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டி, புதிய தலைவராக மகிந்த ராஜபக்சவை நியமிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.