சுதந்திரக் கட்சி தலைமையைக் கைப்பற்றும் முயற்சியில் மகிந்த – உயர்மட்டத்துடன் அவசர கூட்டம்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேனவை நீக்கி விட்டு, அதன் தலைமைப் பதவியைக் கைப்பற்றும் முயற்சியில் மகிந்த ராஜபக்ச இறங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முடியாது என்றும், தாம் நடுநிலையாகச் செயற்படப் போவதாகவும், அறிவித்திருந்த நிலையிலே, மகிந்த ராஜபக்ச கட்சியைக் கைப்பற்றும் நகர்வை மேற்கொண்டுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் தற்போது நடந்து வரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றக் குழுக் கூட்டத்தில், மகிந்த ராஜபக்ச இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருகின்றார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மகிந்த ராஜபக்சவை நியமிப்பது குறித்தும், அவரது தலைமையில் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படுவதாக, அதில் பங்கேற்றுள்ள சுதந்திரக்கட்சியின் பிரமுகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
அத்துடன், நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிடும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரின் உறுப்புரிமையைப் பறிப்பது குறித்தும், இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டு வருகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக் குழுவில் 72 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பி்டத்தக்கது.