நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை உருவாக்கும் புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்து
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை உருவாக்கும் புரிந்துணர்வு உடன்பாடு, இன்று காலை அலரி மாளிகையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜாதிக ஹெல உறுமய மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதி உறுப்பினர்களுக்கும் இடையில் இந்த புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில், அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தவிசாளர் மலிக் சமரவிக்கிரம, பொதுச்செயலர் கபீர் காசின் ஆகியோர் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
ஜாதிக ஹெல உறுமயவின் சார்பில் தலைவர் அதுரலியே ரத்தன தேரர், அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, ஆகியோர் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அதிருப்தி அணி சார்பில், ராஜித சேனாரத்னவும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சிவில் சமூகத்தினரும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
ஐதேகவின் யானைச் சின்னத்தின் கீழ் இந்த நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கவுள்ளது.
அதேவேளை, கொழும்பு, களுத்துறை, கம்பகா, காலி, மாத்தளை, கண்டி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 12 அல்லது 13 இடங்கள், புதிதாக வந்து கூட்டணியில் இணைந்துள்ள அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு ஒதுக்கப்படவுள்ளன.
ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அதுரலியே ரத்தன தேரருக்கு, ஐதேகவின் தேசியப்பட்டியலில் இடம் ஒதுக்கப்படவுள்ளது.
அதேவேளை, சம்பிக்க ரணவக்க கொழும்பிலும், ராஜித சேனாரத்ன களுத்துறையிலும், அர்ஜுன ரணதுங்க கம்பகாவிலும் ஐதேகவில் போட்டியிட இன்று காலை வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.