அவசரமாக சந்திக்க மேற்குலக தூதுவர் முயற்சி – நழுவுகிறார் மைத்திரி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட மகிந்த ராஜபக்சவுக்கு இடமளித்ததையடுத்து, எழுந்துள்ள புதிய அரசியல் சூழல் குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்த மேற்கு நாட்டு இராஜதந்திரிகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட அனுமதிக்கும் முடிவு அறிவிக்கப்பட்டவுடனேயே கொழும்பில் உள்ள பலம்மிக்க மேற்கு நாடு ஒன்றின் தூதுவர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்க நேரம் ஒதுக்கித் தரக் கோரியிருந்தார்.
பிந்திய அரசியல் சூழல் தொடர்பாக கலந்துரையாடவே அவர் நேரம் ஒதுக்க கேட்டிருந்தார்.
குறிப்பிட்ட மேற்கு நாட்டுத் தூதுவரை நாளை திங்கட்கிழமை சந்திப்பதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேரம் ஒதுக்கியிருந்தார்.
எனினும், அந்தச் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்புக்கு வெளியே மத நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதால் தான், மேற்கு நாட்டு தூதுவருடனான சந்திப்பு பிற்போடப்பட்டதாக, சிறிலங்கா அதிபர் செயலகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்கப்பட்டது கொழும்பிலுள்ள மேற்குலக இராஜதந்திரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் எழுச்சியானது, சிறிலங்காவின் மனித உரிமைகள், மற்றும் நல்லிணக்க முயற்சிகளை பாதிக்கும் என்றும் அவர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.