11 கிராம அதிகாரிகளை புனர்வாழ்வுக்கு அனுப்பினார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தமை, குடும்ப உறுப்பினர் ஒருவர் விடுதலைப் புலிகள் உறுப்பினராக இருந்தமை ஆகிய காரணங்களுக்காக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த கிராம அதிகாரிகள் 11பேரை சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்க புனர்வாழ்வுக்கு அனுப்பியுள்ளார்.
இவர்களுக்கு வவுனியா- பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில், கடந்த வாரம் முதல் புனர்வாழ்வுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் இளம் தாய் ஒருவர் உள்ளிட்ட பெண்களும் அடங்குகின்றனர்.
நான்கு ஆண்டுகள் வரையில் கிராம அதிகாரிகளாகப் பணியாற்றியவர்களே இவ்வாறு புனர்வாழ்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு அறிக்கைக்காகவே இவர்கள் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எந்த நீதிமன்ற உத்தரமுமின்றி, பாதுகாப்பு அமைச்சின் செயலரின் கடிதம் மூலமான உத்தரவுக்கு அமைவாகவே இவர்கள் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் இவர்கள் பணியில் இணைத்துக் கொள்ளப்படுவார்களா என்ற சந்தேகமும் நிலவுகிறது.
இதுவரையில், சிறிலங்கா அரசாங்கம் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு மட்டுமே புனர்வாழ்வு அளித்து வந்தது.
தற்போது குடும்ப உறுப்பினர்கள் புலிகள் இயக்கத்துடன் இணைந்திருந்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக, புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருக்காதவர்களையும் சிறிலங்கா அரசாங்கம் புனர்வாழ்வுக்கு அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.