மட்டக்களப்பில் இனந்தெரியாத நபர்களால் ஒருவர் சுட்டுக்கொலை
மட்டக்களப்பு, மண்டூரில் இன்று காலை இனந்தெரியாத நபர்களால், அரசாங்க அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் சமூக சேவை அதிகாரியாக பணியாற்றும், 44 வயதான சச்சிதானந்தம் மதிதயான் என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவராவார்.
இன்றுகாலை மண்டூரிலுள்ள தனது வீட்டில் இருந்த போது, உந்துருளியில் வந்த இரு துப்பாக்கிதாரிகளே, இவரைச் சுட்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த, சச்சிதானந்தம் மதிதயானை களுவாஞ்சிக்குடி மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, வழியில் அவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் மட்டக்களப்பில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொலைக்கான கொலைக்கான பின்னணி குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும், கொலையாளிகளைப் பிடிக்க தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.