மைத்திரியை புங்குடுதீவு செல்ல விடாமல் தடுத்த அதிபர் பாதுகாப்புப் பிரிவு
யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, புங்குடுதீவுக்குச் செல்வதற்கு, சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவினர் அனுமதிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையை அடுத்து எழுந்துள்ள, நிலைமைகள் தொடர்பாக, ஆராய்வதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று யாழ்ப்பாணத்துக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டார்.
இதன்போது, புங்குடுதீவுக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை ஆராய வேண்டும் என்ற அவருக்கு ஆலோசனைகள் கூறப்பட்டிருந்தன.
அதற்கு அவர் இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், அதிபர் பாதுகாப்பு பிரிவினர் அங்கு செல்வதற்கு அனுமதி அளிக்கவில்லை.
பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி சிறிலங்கா அதிபரின் புங்குடுதீவுப் பயணம் தடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்தே, மாணவி வித்தியாவின் தாய் மற்றும் சகோதரன் ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டு, ஆளுனர் மாளிகையில் அவர்களை சிறிலங்கா அதிபர் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்று தெரிவிக்கப்படுகிறது.