புத்தாண்டு வாழ்த்துக் கூறாத தொழிற்கட்சித் தலைவருக்கு புலம்பெயர் சிங்களவர்கள் கண்டனம்
தமிழ்ச் சமூகத்துக்கு மட்டும், புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த, பிரித்தானியாவின் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் எட்வேர்ட் மிலிபான்டுக்கு, பிரித்தானியாவில் வாழும் சிங்களவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டை முன்னிட்டு, தொழிற்கட்சித் தலைவர் எட்வேர்ட் மிலிபான்ட் வாழ்த்துச் செய்தி ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார்.
அதில், பிரித்தானியாவில் வாழும் தமிழர்களுடன்,தொழிற்கட்சி எப்போதுமே, நட்பாக இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
அந்த நட்புத் தொடரும் என்றும், சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகளுக்கு தமது கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்றும் எட்வேர்ட் மிலிபான்ட் கூறியிருந்தார்.
இந்தச் செய்தியில் புத்தாண்டு கொண்டாடும் தமிழர்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டிருந்த போதும், நேற்று புத்தாண்டைக் கொண்டாடும் சிங்களவர்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டிருக்கவில்லை.
இது பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் சிங்களவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தொழிற்கட்சித் தலைவரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆட்சியைப் பிடிக்க தமிழ் வாக்குகளைப் பெறலாம் என்ற நம்பிக்கையில், எட்வேர்ட் மிலிபான்ட் சந்தர்ப்பவாத அறிக்கையை வெளியிட்டுள்ளதாக, பிரித்தானிய- சிறிலங்கா பேரவையின் தலைவர் ஜனக அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அரசியல் நோக்கத்துடன் வெளியிடப்பட்ட அவரது அறிக்கையைக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொன் வெளியிட்ட புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், சிங்களவர்களுக்கும் வாழ்த்துக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.