மனித உரிமைகள், ஜனநாயகம், பொறுப்புக்கூறல் குறித்து சிறிலங்காவுடன் அமெரிக்கா பேச்சு
சிறிலங்கா அரசாங்கத்துடன், மனித உரிமைகள், ஜனநாயகத்தை வலுப்படுத்தல், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் ஆகிய விவகாரங்கள் குறித்து, அமெரிக்கா கலந்துரையாடியுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், ஜனநாயகம்,மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலராகப் பணியாற்றும், ரொம் மாலினோவ்ஸ்கி கடந்த 2ம் நாள் தொடக்கம், 10ம் நாள் வரை சிறிலங்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
இது தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ஜனநாயகம்,மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி, சிறிலங்காவில் மூத்த அரசாங்க பிரதிநிதிகளைச் சந்தித்து, மனித உரிமைகள், ஜனநாயகத்தை வலுப்படுத்தல், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர், மனித உரிமைகள், மத மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.